Release Date : ௦7 அக்டோபர் 2௦25
சைபர் மோசடிகளில் இழந்த பணம் மீட்பு! ரூ.21.69 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!
சென்னை: பெருநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சைபர் மோசடிகளில் பலர் இழந்த 21.69 கோடி ரூபாயை சென்னை சைபர் கிரைம் போலீசார் துரிதமாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.சென்னை பெருநகரின் நான்கு மண்டலங்களில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களும்,12 காவல் மாவட்டங்களில் சைபர் குற்ற குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் சைபர் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு உதவும் விதமாக 1930 என்ற அவசர அழைப்பு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிலோ அல்லது நேரடியாகவோ வழங்கப்படுகிற புகார்கள் குறித்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணத்தை இழந்தவர்களுக்கு உடனடியாக அவை மீட்டுத் தரப்படுகின்றன.மேலும் சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சைபர் குற்றங்களை உடனடியாகப் பதிவு செய்தல், மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்குதல், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முடக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற்று தருதல் மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் (01.09.2025 முதல் 30.09.2025 வரை) 46 புகார் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 38 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு ரூ.56,12,247 மீட்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.அதே போல் வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 20 மனுக்கள் பெறப்பட்டு ரூ.27,24,239 மீட்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 34 மனுக்கள் பெறப்பட்டு 9 புகார் மனுக்களின்பேரில் ரூ.21,13,235 மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதே போல் தெற்கு மண்டலத்தில் 55 மனுக்கள் பெறப்பட்டதில் 21 புகார் மனுக்களின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு ரூ.12,66,079 மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்திலும் 50 மனுக்கள் பெறப்பட்டு ரூ.10,32,274 மீட்கப்பட்டுள்ளது.இதில் மொத்தமாக 205 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 121 புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தம் பணம் 1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் 2025 ஆம் ஆண்டு 30.09.2025 வரை 21,69,37,186 (21.69கோடி) ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இழந்த பணத்தை திரும்ப பெற்ற பொதுமக்கள் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்ததாக சென்னை சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் இணையவழி பண பரிமாற்றம் செய்யும் போது மிகுந்த விழிப்புணர்வுடனும், நம்பகத்தன்மையை சரிபார்த்தும் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பணத்தை இழந்தவர்கள் உரிய புகாரளிக்க 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் புகார்களை அனுப்பவும் சென்னை சைபர் கிரைம் போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
www.anandabhaskar.com